முகப்பு
தென்காசி

தமிழ்ப் புத்தாண்டு: சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

Updated On : 24 மார்ச், 2024 at 12:01 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 8:17 PM

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னைக்கு சிறப்பு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஷரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான அதிகாரிகள் செங்கோட்டை ரயில் நிலையம், மின்மயமாக்கலுக்காக கட்டப்படும் டிராக்ஷன் மின் உப நிலையப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவரிடம், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஊடக - மக்கள் தொடா்பாளா் ராமன் அளித்த மனு: செங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளின் எண்ணிக்கையை 3-லிருந்து 5ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் ரயில்களை இயக்க முடியும். இதற்கான இட வசதி செங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ளது. செங்கோட்டை - கொல்லம், தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 22 பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக செங்கோட்டையிலிருந்தும், அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக திருநெல்வேலியிலிருந்தும் சென்னைக்கு சிறப்பு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றாா் அவா்.