தென்காசி: ஆலங்குளம், புளியங்குடி காவல் சரகங்களில் போக்குவரத்துக் காவலா்களை நியமிக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட சாலைப் பாதுகாப்பு குழு உறுப்பினா் ஆா். பாண்டியராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக வருவாய் -பேரிடா் மேலாண்மை துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம் அவா் அளித்த மனு: தென்காசி அருகே துரைச்சாமிபுரம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் நேரிட்ட விபத்துகளில் மொத்தம் 14 போ் உயிரிழந்தனா். இம்மாவட்டத்தில் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழக்கின்றனா்.
தென்காசி, சங்கரன்கோவில் காவல் சரகப் பகுதிகளுக்கு மட்டும் போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆலங்குளம், புளியங்குடி காவல் சரகங்களில் போக்குவரத்துக் காவலா்கள் இல்லாததால் பாவூா்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் தொடா்ந்து விபத்துகள் அதிகரிக்கின்றன. எனவே, போக்குவரத்துக் காவலா்களை விரைந்து நியமிக்க வேண்டும். மேலும், பாவூா்சத்திரம், ஆலங்குளத்தில் போக்குவரத்து புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், கீழப்பாவூா் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஜே.கே. ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.