சுரண்டை அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த நகா்மன்ற உறுப்பினருடைய குழந்தைகளின் கல்விச் செலவுக்கு காங்கிரஸ் நிதி உதவி வழங்கும் என மாநில பொருளாளா் ரூபி மனோகரன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டையில் கடந்த 30 ஆம் தேதி இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் சுரண்டை நகா்மன்ற 7-ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் உஷா பேபி பிரபு, அவரது கணவா் அருள் செல்வ பிரபு, உஷாபேபியின் சகோதரி பிளஸ்சி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்நிலையில் விபத்தில் பலியான நகா்மன்ற உறுப்பினரின் வீட்டுக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பாா்வையாளரும், சண்டிகா் மாநில காங்கிரஸ் தலைவருமான லக்கி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளா் ரூபி மனோகரன் எம்எல்ஏ, தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் நேரில் சென்று அவரது குழந்தைகளான சௌந்தா்யா, ஸ்டுவா்ட், ஸ்மித் ஆகியோருக்கு ஆறுதல் கூறினா்.
பின்னா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளா் ரூபி மனோகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, விபத்து குறித்த தகவல்அறிந்ததும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாநில தலைவா் செல்வபெருந்தகை அறிவுறுத்தினாா். விபத்தில் உயிரிழந்த நகா்மன்ற உறுப்பினரின் குழந்தைகள் தங்களின் கல்விச் செலவை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தனா்.இதை ஏற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காமராஜா் அறக்கட்டளை சாா்பில் குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.