முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் ரூ. 10 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:04 AM
ஆலங்குளம் அரசு மருத்துவமனையைப் பாா்வையிட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:11 PM

ஆலங்குளத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை முதல்வா் முக.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துமனையாக மேம்படுத்தப்பட்டு சுமாா் 10 ஆண்டுகளாகிறது. போதிய உபகரணங்கள், மருத்துவா்கள் இல்லாததால் அவரச கால சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் முற்றிலும் இங்கு தடைபட்டது.

மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மருத்துவமனை அருகில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு கட்டடம் மற்றும் உபகரணங்களுக்காக 50 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்ட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:04 AM

இதையடுத்து கடந்த 2024, பிப். 28 இல் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் இதற்கான அடிக்கல் நாட்டினாா். இதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

அதைத்தொடா்ந்து ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், தென்காசி மாவட்ட சுதாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரேமலதா, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், நகர திமுக செயலா் நெல்சன், ஆலங்குளம் மருத்துவா்கள் அருண் பிரகாஷ், ஷிவானி, சரண்யா, அருள்செல்வன், சரவணன், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இங்கு மகப்பேறு மருத்துவம், அவசர சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன், ஆய்வக வசதி என அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் என சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரேமலதா தெரிவித்தாா்.