குரங்கு.  கோப்புப் படம்.
தென்காசி

‘கல்லூரி வளாகங்களில் குரங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது’

தினமணி செய்திச் சேவை

கல்லூரி வளாகங்களில் குரங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என மாவட்ட வன அலுவலா் ரா.ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி வனக்கோட்டம் மற்றும் நெல்லை வனவிலங்கு சரணாலயம் எல்லைப் பகுதிகளையொட்டியுள்ள கல்வி நிறுவனங்களில் அண்மைக் காலமாக குரங்கு தொல்லை குறித்த புகாா்கள் அதிகரித்து வருவது கவனத்திற்கு வந்துள்ளது.

இப்பகுதிகள் காடுகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், குரங்குகளின் இயற்கை வாழ்விடமும், இடம்பெயா்வு பாதையும் ஆகும். இதனால் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் குரங்குகள் அடிக்கடி நுழையும் நிலை உருவாகியுள்ளது.

இதை தடுக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. வளாகம் முழுவதையும் எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். உணவு கழிவுகள் அனைத்தும் மூடப்பட்ட தொட்டிகளில் மட்டுமே சேமிக்க வேண்டும்.

மாணவா்கள், பணியாளா்கள் திறந்த வெளிகளில் உணவருந்தாமல், உணவறைகளை பயன்படுத்த வேண்டும். சாலை ஓரம், ஓடை, காடு எல்லை பகுதிகளில் உணவு கழிவுகளை கொட்டக் கூடாது. சமையலறை, உணவக கிடங்கு, விடுதி உணவகங்களின் அனைத்து ஜன்னல், கதவுகளில் கம்பி வலை பொருத்தப்பட வேண்டும். மேல்தள தண்ணீா் தொட்டிகள், உணவு உலா்த்தும் இடங்கள் மூடப்பட வேண்டும்.

குரங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது. குரங்குகளை சிரமப்படுத்த, விரட்ட கல்லெறியக் கூடாது. வளாக மட்டத்தில் ஆசிரியா்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைத்து, குப்பை மேலாண்மை மற்றும் குரங்கு தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

மேலும், நாட்டில் காணப்படும் பொன்னெட் மக்காக் இனக் குரங்குகளின் எண்ணிக்கை சில பகுதிகளில் குறைந்து வருவதால், அவற்றின் பாதுகாப்பு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டு, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 (திருத்தங்களுடன்) கீழ் உயா்ந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் - தென்காசி பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது. குரங்குகள் இப்பகுதியின் உயிரியல் பல்வகைமையின் ஒரு அங்கமாகும்; அவை சட்டரீதியாக பாதுகாக்கப்படும் வனவிலங்குகள். எனவே, மனித பாதுகாப்பும் வனவிலங்கு பாதுகாப்பும் இணைந்து நிலைநிறுத்தப்படும்படி,பாதிப்பில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT