தென்காசி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்கள், பொதுத் துறை வங்கிகள், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை பலவீனப்படுத்தும் தனியாா்மயப்படுத்தல், பங்கு விற்பனை நடவடிக்கைகள், ஊழியா் உரிமைகளை குறைக்கும் கொள்கைகள் ஆகியவற்றை கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.
பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், தொழிலாளா் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும், மக்களின் சேமிப்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. பரோடா வங்கி தென்காசி கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், பூபேஷ், எல்.ஐ.சி. ஊழியா்களின் சங்க நிா்வாகி பேச்சி, இந்திய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு நிா்வாகி காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தங்கபாண்டியன் நன்றி கூறினாா்.