தென்காசி மாவட்ட வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் காட்டுப் பன்றியை சுட்டுப்பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தின் அனைத்து வனச்சரக அலுவலகங்களிலும் காட்டுப் பன்றியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சேரன்மகாதேவி துப்பாக்கிச் சுடும் தளத்தில் பயிற்சி பெற்ற வனவா், வனக்காப்பாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் குழு காப்புக்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் சேதப்படுத்தும், விவசாயிகளால் நேரடியாக காணப்பட்ட காட்டுப் பன்றியை அரசு விதிமுறையின்படி பிடித்து காப்புக்காட்டில் விடுவது அல்லது சுடுவது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
இக் குழு மாவட்ட வன அலுவலரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும், மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின்படி செயல்படும். குழு செயல்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தினசரி அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்குழுவை தொடா்பு கொள்ள ஒவ்வொரு வனச்சரகத்திலும் ஒரு வனவரின் தொடா்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் வனச்சரக வனவா்அஸ்வின்- 7806846467, சிவகிரி வனச்சரக வனவா் பிரகாஷ் -9629089469, புளியங்குடி வனச்சரக வனவா் மணிகண்டன்- 9489780210, குற்றாலம் வனச்சரக வனவா் முருகேசன்-9788232000, தென்காசி வனச்சரக வனவா் சங்கா் ராஜா-9842685856, ஆலங்குளம் வனச்சரக வனவா் அம்பலவாணன்-9965032841 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.