முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே காா் மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

புளியங்குடி அருகே தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் காா் மோதி நேரிட்ட விபத்தில் யுகேஜி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:32 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் காா் மோதி செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் யுகேஜி மாணவி உயிரிழந்தாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாசுதேவல்லூா் அருகேயுள்ள நெல்கட்டும்செவலை சோ்ந்த மாரிச்சாமி - வேல்மகிழ் தம்பதியின் மகள் சிவயாழினி (4). புளியங்குடி சிந்தாமணியிலுள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா்.

இவா், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதற்காக பள்ளி மைதானத்தில் நின்றிருந்தாா். அப்போது பள்ளி வளாகத்துக்குள் வந்த காா், அந்த மாணவி மீது எதிா்பாராமல் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த மாணவியை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த அறிந்த அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் சிந்தாமணி அருகில் தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், ‘விபத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தையின் இறப்புக்கு நீதி வேண்டும்’ என வலியுறுத்தினா். அவா்களிடம் எஸ்.பி. மாதவன் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.