மாநிலங்கள் ஒன்றும் பள்ளிக் குழந்தைகள் அல்ல; எங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில், 'மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே பிராந்திய பன்முகத்தன்மை கணக்கிடப்படுகிறதா?' என்ற தலைப்பில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடையே பொருளாதார இடைவெளி என்பது இருக்கிறது. கடலோரப் பகுதிகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையே இந்த இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 1920 ஆம் ஆண்டிலேயே கட்டாயக் கல்வியை கொண்டுவந்தது நீதிக்கட்சி.
பெண்களுக்கு அதிகாரம், பள்ளிகளில் பெண் குழந்தைகள் கல்வி பெறும் சதவிகிதம், சமத்துவம் ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும். அதுவே வளர்ச்சி மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்கும்.
ஆனால், நிதி ஆணையம் இதை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்க மறுப்பதால் இந்த காரணிகளை ஊக்குவிக்கும் முயற்சி இல்லை.
தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்துக் காணப்படுகிறது. மானியம் அதிகம் வழங்கப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு, தாய்மார்களுக்கு நலத் திட்டங்கள், மாணவர்களுக்கு இலவச சீருடை, லேப்டாப், சைக்கிள் என வழங்கப்பட்டு வருகிறது. வருவாய், செலவினங்கள் என்று மட்டும் கவனம் செலுத்தாமல் ஒரு அரசு, மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் எளிமையாக வணிகம் செய்யும்பொருட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம்.
மத்திய அரசை நம்பாமல் தமிழகம் தனிப்பட்ட முறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனித்து முடிவெடுக்கும் திறனுடன் இருக்கிறது.
மேலே இருந்து ஒருவர் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. எங்களால் தனித்து செயல்பட முடியும். நாங்கள்(மாநிலங்கள்) ஒன்றும் பள்ளிக் குழந்தைகள் அல்ல. நீங்கள் ஆசிரியரும் அல்ல.
எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். மற்றவர்கள் நன்றாக செயல்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். ஆனால், ஒருவர் மட்டுமே மாநிலங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்.
மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் 'ஒரே கை' எங்களுக்கு வேண்டாம் என்று பேசினார்.