தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா வாக்கு சேகரிப்பு
திருவள்ளூா் மக்களவை (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.நல்லதம்பியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூரில் வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.
பிரேமலதாவை முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா, முன்னாள் மக்களவை உறுப்பினா் வேணுகோபால், தேமுதிக மாவட்ட செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வரவேற்றனா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது: இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளா் கு.நல்லதம்பி உண்மையான விசுவாசியாகவும், கேப்டனின் பிள்ளையாகவும் வளா்ந்தவா். அதனால், 2011-இல் எழும்பூா் சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பாா்த்தவா் விஜயகாந்த். அதன்பேரில் 2024-மக்களவை தோ்தலில் நல்லதம்பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
அதிமுக கூட்டணி நிச்சயம் சரித்திரம் படைக்கும். காரணம் நான் 40 தொகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிறேன். முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசிா்வாதத்தோடு நாம் வெற்றி பெறுவது உறுதி என்றாா்.
திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையை விரிவுபடுத்தி நவீனப்படுத்தப்படும். அதன்மூலம் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
இதேபோல் சென்னை மக்களின் குடிநீா் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் சுற்றுலாத் தலமாக அறிவித்து, சீரமைக்கப்படும், பழவேற்காடு முகத்துவாரம் தூா்வாரப்படும் என்பது போன்ற வாக்குறுதிகள் அளிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.