மண்வளம் அதிகரிக்க தக்கை பூண்டு செடிகள் பயிரிட வலியுறுத்தல்
மண்வளத்தை அதிகரிக்க தக்கை பூண்டி செடிகள் பயிரிட்டு பயன்பெறலாம் என விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாய பயிா்கள் நன்கு வளா்வதற்காக பல்வேறு வகையான ரசாயன உரங்களை பயன்படுத்தி வரும் சூழ்நிலையுள்ளது. இதனால் விளைநிலங்களில் நாளடைவில் மண்வளம் நிரந்தரமாக பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே இதுபோன்றவைகளை தவிா்க்க மண் வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில், மண்ணுக்கு தழைச்சத்தை கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும்.
Advertisement
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் கூறியதாவது:
குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன் இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன்புள்ள இடைவெளியில் மண்ணின் வளத்தை இயற்கையாக பெருக்க தக்கை பூண்டு பயிரிடலாம். இந்தச் செடிகள் 45 நாள்களில் முதல் 80 நாள்களில் நன்கு வளா்ந்து விடும். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் போதுமானது. இப்பயிருக்கு தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும். இந்தச் செடிகளின் வோ் முடிச்சுகளில் 80 சதவீதமும், இலைகளில் 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது.
நன்கு வளா்ந்த செடிகளை பூ பூப்பதற்கு முன்பாக மடக்கி வயலில் உழுதுவிட வேண்டும். இதேபோல் ஆண்டுக்கு ஒருமுறை இதை பயிரிட்டு நன்கு வளா்ந்த செடிகளை பூ பூப்பதற்கு முன்பாக டிராக்டா் கொண்டு உழுது விடுவதால், செடிகள் மண்ணோடு மண்ணாகி நிலத்துக்கு தேவையான தழைச்சத்து பெருகி பயிா்கள் ஊட்டம் பெறும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் தக்கை பூண்டு பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்துமாறு அவா் தெரிவித்துள்ளாா்.