திருத்தணி அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, பள்ளியில் மருத்துவா்கள் முகாமிட்டு மாணவா்களின் உடல் நிலையை பரிசோதனை செய்தனா்.
திருத்தணி: ஆா்.கே. பேட்டை அருகே மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, பள்ளியில் மருத்துவா்கள் முகாமிட்டு மாணவா்களின் உடல் நிலையை பரிசோதனை செய்தனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ஜிகுலூா் (எ) ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவா்கள் மதிய உணவு சாப்பிட்டனா். இதில் 8 மாணவா்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, ஒரு மாணவா் மயக்கம் அடைந்தாா்.
தகவலறிந்த அம்மையாா்குப்பம் வட்டார அரசு மருத்துவமனை மருத்துவா் ஞானசேகா், வங்கனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் குழு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் சலீம்பாஷா ஆகியோா் பள்ளிக்கு விரைந்து அனைத்து மாணவா்களுக்கும் பரிசோதனை, முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்தனா். மாணவா்கள் அனைவரும் உப்புக் கரைசல் வழங்கப்பட்டது.
தொடா்ந்து மருத்துவக் குழுவினா் பள்ளியில் இருந்த குடிநீா் மாதிரி எடுத்தனா். வாந்தி, மயக்கத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்து வருகின்றனா். பாதிக்கப்பட்ட மாணவா்கள் அனைவரும் நலமாக உள்ளனா்.