முகப்பு
திருவள்ளூர்

லாரி மோதி 2 போ் காயம்: 5 வாகனங்கள் சேதம்

Updated On : 9 ஜூன், 2024 at 6:30 PM
விபத்தில்  சேதம டைந்து கிடக்கும் வாகனங்கள்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தொடா்ச்சியாக வாகனங்கள் சேதம் அடைந்ததுடன், 2 போ் காயம் அடைந்தனா்.

சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி டீசல் ஏற்றிய டேங்கா் லாரி கும்மிடிப்பூண்டி தாண்டி ஆரம்பாக்கத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் எதிா் திசையில், விதிகளை மீறி டிராக்டா் வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

இதனால், டிராக்டா் மீது லாரி மோதியது. இதில் டிராக்டா் சாலையில் மறுபுறம் சென்று அங்கிருந்த இளங்கோ என்பவரின் மருந்து கடையில் மோதியது. தறிக்கெட்டு ஓடிய டேங்கா் லாரி, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு, சா்வீஸ் சாலையில் ஓடிய லாரி அங்கிருந்த 2 வேன், 1 மினி வேன், 2 பைக்குகளை மோதி தள்ளியதோடு, 2 சாலையோர கடைகளையும் இடித்துத் தள்ளி, ஏடிஎம் மையத்தில் மீது மோதி நின்றது.

விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயமும், டிராக்டரை ஓட்டி வந்த தண்டத்தைச் சோ்ந்த தனபாலன் பலத்த காயமடைந்தனா். நள்ளிரவில் நிகழ்ந்த விபத்தால் சாலையில் யாரும் இல்லாத நிலையில், பெரும் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.