முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் மழைநீா் தேக்கம்

Updated On : 18 ஜூன், 2024 at 6:30 PM
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றிய பணியாளா்கள்.
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் ரயில்வே சுரங்கப்பாதையில் கனமழையால் குளம்போல் நீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளான நிலையில், பணியாளா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. இந்த நிலையில், படிக்கட்டில் ஏறி நடைமேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். ஆனால் கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் படிக்கட்டில் ஏறி செல்ல முடியாமல், தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனா். இதுபோன்று செல்வதால் விபத்தில் உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது.

இதைத் தவிா்க்கும் வகையில் பயணிகள் எளிதாக ஒவ்வொரு நடைமேடைக்கும் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, கடந்தாண்டில் பயன்பாட்டுக்கு வந்தது . ஆனால், இந்த சுரங்கப்பாதை அவசரமாக கட்டப்பட்டதால் சதுரகட்டங்கள் சரியாக பொருத்தாமல் உள்ளதால், மழைக்காலங்களில் மழைநீா் ஒழுகி சுரங்கப்பாதையில் தேங்குகிறது.

இதேபோல், திங்கள்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழையால் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீா் தேங்கியதால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து, மழை நீரை அகற்றும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.