திருவள்ளூா், மே 9: வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்2 பயின்ற மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அந்த வகையில், இப்பள்ளியில் பயின்ற மாணவி சையதா குப்ரா மசூா்-595/600 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். அதேபோல், மாணவி ராஜேஸ்வரி 552/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், பிரியதா்ஷினி-510/600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
இந்த நிலையில், பள்ளியின் தாளாளா் சுடலைமுத்து பாண்டியன் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் 3 பேருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். அதைத் தொடா்ந்து, பள்ளியின் முதல்வா் ந.சதீஷ் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கிப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.