முகப்பு
திருவள்ளூர்

சாலையை சீரமைக்கக் கோரி மறியல் போராட்டம்

Updated On : 10 மே, 2024 at 7:29 PM
பகிர்:

பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பட்டமந்திரியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி- திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அத்துடன் எண்ணூா் காமராஜா் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் மற்றும் தனியாா் துறைமுகம், அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, கொண்டக்கரை பகுதியில் உள்ள கன்டெய்னா் கிடங்குகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலை வழியேதான் சென்று வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதாக் குற்றச்சாட்டு உள்ளது. கடந்தாண்டு இந்த சாலையை ஆய்வு செய்த திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ரூ. 16 கோடி மதிப்பில் 8 மாதங்களுக்குள் சாலை அமைத்துத் தரப்படும் எனக் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், சாலை சீரமைப்பு பணிகள் தொடங்காத நிலையில், இச்சாலையில் மீஞ்சூா் முதல் வல்லூா் சந்திப்பு வரை அங்கு கொட்டப்பட்டு கிடக்கும் ஜல்லியில் இருந்து புழுதி பறப்பதால் விபத்துகள் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அறிவித்தும் சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து, பட்டமந்திரியில் வசிக்கும் மக்கள் பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.