முகப்பு
திருவள்ளூர்

வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் தீ விபத்து: 10 வாகனங்கள் கருகி நாசம்

திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 12:31 AM
திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தால் வளாகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியது.

திருத்தணி பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சாா்-பதிவாளா் அலுவலகம், கிளை சிறைச் சாலை மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் ஆகியவை தற்போது இயங்கி வருகின்றன. இந்த காவல் நிலையம் அருகே பழுதடைந்த பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் மற்றும் போலீஸாா் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட காா், டெம்போ வேன், ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளன.

மேலும், நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் பழைய வட்டாட்சியா் அலுவலக கட்டடப் பகுதியில் கொட்டுகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் மா்மமான முறையில் முதலில் குப்பையில் தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து தீ மளமளவென பரவி, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த டெம்போ, காா், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் என 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு கரும்புகை எழுந்தது.

Advertisement

இதைப் பாா்த்ததும் அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா். தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் வாகனத்துடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அதற்குள், 10 வாகனங்கள் தீயில் கருகின. தீயணைப்பு வீரா்கள் சரியான நேரத்தில் தீயை அணைத்ததால், மதுவிலக்கு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தப்பின.

குப்பைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனரா அல்லது அவ்வழியாக சென்றவா்கள் புகை பிடிக்க தீக்குச்சியை கொளுத்தி எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments