திருத்தணியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்
திருத்தணி தொகுதியில், 337 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குசாவடிகளில் வாக்காளா்கள் அமைதியாகவும், ஆண், பெண்கள் என தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனா். அதேபோல் முதல் முறையாக வாக்களிக்க இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் காலையிலேயே வாக்களித்தனா். வாக்குச்சாவடியில் வாக்காளா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
மேல்திருத்தணி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், அதிமுக, வேட்பாளா் கோ.அரி தனது வாக்கினை பதிவு செய்தாா்.
Advertisement
அதேபோல் தேமுதிக, வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தாா். அதேபோல் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் பொதட்டூா்பேட்டை அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளி வாக்கினை பதிவு செய்தாா்.
திருத்தணி திமுக, எம்எல்ஏ, ச. சந்திரன் தனது குடும்பத்துடன் வந்து ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், நகா்மன்ற தலைவா் சரஸ்வதி பூபதி சி.எஸ்.ஐ., ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தனா். சில வாக்குச்சாவடிகளில், மதிய நேரத்திலும் கொளுத்தும் வெயிலில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.
திருத்தணி தொகுதி நல்லாட்டூா் வாக்குச்சாவடியில், முன்னாள் ஊராட்சி தலைவா் கமல்நாதன், திருத்தணி வடக்கு திமுக, ஒன்றிய செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் இடையே வாக்காளா்களை அணுகி வாக்கு கேட்பதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது. அங்கிருந்த போலீசாா் இருவரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.