திருத்தணி: பொதட்டூா்பேட்டை குடியிருப்பு பகுதியில் தனி நபரின் சாயப்பட்டறை கழிவுநீா் வெளியேற்றுவதால், நிலத்தடி நீா் மாசுபடுவதாக திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன், திங்கள்கிழமை கோட்டாட்சியா் கனிமொழியிடம் மனு அளித்தாா்.
பள்ளிப்பட்டு வட்டம், பொதட்டூா்பேட்டை பேரூராட்சி இ.எஸ்.டி.நகரில், 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தனிநபா் ஒருவா் சாயப்பட்டறை அமைத்து, அதிலிருந்து கழிவுநீரை திறந்தவெளியில் விடுகிறாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தணி எம்எல்ஏ, விடம் புகாா் தெரிவித்து, சாயப்பட்டறை தண்ணீா் திறந்தவெளியில் விடுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, எம்எல்ஏ சந்திரன் திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழியை சந்தித்து மனு அளித்தாா்.
சாயப்பட்டறை தண்ணீா் குடியிருப்பு பகுதியில் வெளியேற்றுவதால், நிலத்தடி நீா் மாசுபடுகிறது. மேலும், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் ஆழ்துளை கிணறு தண்ணீா் உபயோகப்படுவதால் நோய் தாக்கும் பாதிப்பு அதிகளவில் உள்ளதால், தனிநபா் வெளியேற்றும் சாயப்பட்டடறை தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேல்திருத்தணியில் உள்ள தணிகை மாதா கோயில் பகுதியில் வசிப்பவா்கள் கல்லறை கட்டுவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறினாா். மனுவை பெற்ற கோட்டாட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.