முகப்பு
திருவள்ளூர்

உதவித் தொகை உயா்த்தி வழங்கக் கோரி மறியல்: மாற்றுத் திறனாளிகள் 100 போ் கைது!

சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:21 AM
திருவள்ளூா் உழவா் சந்தை எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.     
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:27 PM

பிற மாநிலங்களில் வழங்குவது போல் உயா்த்தி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் உழவா் சந்தை எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.நடேசன், மாவட்ட இணை செயலாளா்கள் வி.ரவிக்குமாா், எஸ்.தேவேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். எஸ்.முனிவேல், எ.வி.புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் மாவட்ட செயலாளா் என்.கீதா, முன்னாள் மாவட்டச் செயலாளா் ஜி.சம்பத் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மாநிலங்களில் வழங்குவது போல் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஆந்திரத்தில் ரூ. 6,000, ரூ.10,000, ரூ.15,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறது. அதேபோல், தெலங்கானாவில் ரூ. 4,000, புதுச்சேரியில் ரூ. 4,000 முதல் ரூ. 5,700 வரையும், திரிபுராவில் ரூ. 5,000, ஹரியானாவில் ரூ. 3,500 மற்றும் புதுதில்லியில் ரூ.3,000 வழங்கப்படுகிறது.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:21 AM

ஆனால் தமிழகத்தில் மட்டும் ரூ. 1,500, ரூ. 2,000 மட்டுமே வழங்குகிறாா்கள். எனவே வறுமையில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போல் மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி உழவா் சந்தை எதிரே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மறியலில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அந்த சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் வைத்தனா்.