திரெளபதி அம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு
திரெளபதி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு குழந்தை வரம் கேட்டு அம்மனை வழிபட்டனா்.
மேல்திருத்தணி பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த, 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், மூலவா் அம்மனுக்கு சந்தன காப்பு நிகழ்ச்சியும், மாலையில் உற்சவா் அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது.
மேலும், கடந்த, 13-ஆம் தேதி திரெளபதி அம்மன், 15-ஆம் தேதி சுபத்திரை அம்மன் ஆகியோருக்கும் அா்ச்சுனனுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோயில் எதிரே, 40 அடி உயர பனை மரத்தை நட்டும், அா்ச்சுனன் தவம் புரிவதற்காக, பனை மரத்தில் ஏற்படுத்திய படிகளில் பாடல்கள் பாடியவாறு உச்சிப் பகுதிக்கு சென்று சிவபெருமானை நினைத்து தவம் புரிந்தாா்.
Advertisement
அதே நேரத்தில் பனைமரத்தின் அடியில் பெண்கள் குழந்தை வரம் வேண்டி படுத்து தவம் செய்தனா். இந்நிகழ்ச்சியில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனா்.