பணிகள் முடிந்தும் திறக்காமல் உள்ள உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம்
திருவள்ளூா் அருகே அனைத்து வசதியுடன் ரூ.38.50 லட்சத்தில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் கூடத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையிலும் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒன்றியங்கள்தோறும் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதில், ஒரு சில இடங்களில் சொந்த கட்டடத்தில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. அதேபோல், இல்லாத இடங்களில் புதிதாகவும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்றாயன்பாளையம், பூண்டி, திருப்போ், மேட்டுப்பாளையம், பிளேஸ்பாளையம் உள்பட 5 கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக நெடுந்தூரம் கொண்டு செல்லவேண்டியுள்ளது. அதனால் தங்கள் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என ஆட்சியரிடம் அந்தப் பகுதி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
Advertisement
Advertisement
இக்கோரிக்கைகளை ஏற்று சென்றாயன்பாளையம் கிராமத்தில் கடந்த 2025-இல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் மூலம் ரூ. 38.50 லட்சம் மதிப்பில் உலா் களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம் அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயாராக உள்ள நிலையில், இதுவரை தொடங்குவதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் காட்சி பொருளாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடமில்லாமல், சென்றாயன்பாளையம் கிராம சேவை மைய கட்டட வளாகத்தில் போதுமான இடவசதியில்லாத நிலையிலும், நெல் மூட்டைகளை பாதுகாப்பின்றி வைத்து உள்ளனா். இதனால், அந்த சேவை மைய கட்டடத்தின் திறந்த வெளியில் நெல் மூட்டைகளை வைத்து வருகின்றனா். தற்போதைய நிலையில் மழைக்காலம் முன்னதாகவே தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் அவ்வப்போது திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்து அனைத்து வசதியுடன் தயாராக உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி உடனே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடங்கவும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.