தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் வனங்கள் சந்திக்கும் கூடலூரில் ஆன்மிக சுற்றுலாத் தலமாக இருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது நம்பாலக்கோட்டை சிவன்மலை கோயில்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி, கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம், வயநாடு மாவட்டத்தின் முத்தங்கா சரணாலயம், கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், ஓவேலி மலைத்தொடர் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று மாநிலங்களின் வனங்கள் சங்கமிக்கும் இடமாகும்.
இந்தப் பகுதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்தின் மையப் பகுதியாகவும் விளங்குகிறது. கூடலூர் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ.தொலைவில் நம்பாலக்கோட்டை பகுதியில் உள்ளது சிவன்மலை. மாதந்தோறும் பௌர்ணமி அன்று பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் செய்வது வழக்கமாக உள்ளது.
கார்த்திகை தீபத்தன்று சிவன்மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று மலை உச்சிக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபடுவர். இந்த இடத்தில் கூடும் பக்தர்களுக்கு இது ஒரு ஆன்மிக சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
- ஆர்.ராஜேந்திரன்