திருப்பத்தூரில் கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம் சமூகச் சேவைப் பணிகளை மனிதநேயத்துடன் தொடர்ந்து செய்து வருகிறது.
உற்றார், உறவினரை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு உணவுக்கு வழியில்லாமலும், உறங்க இடமில்லாமலும், தெருக்களில் அரை நிர்வாணத்தோடு, ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மனிதநேயத்தோடு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு உதவும் உள்ளங்கள் என்ற மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் ரயில்வே சாலையில் கடந்த 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த இல்லம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. சிறந்த சமூகத் தொண்டு நிறுவனத்துக்கான விருதை இந்தத் தொண்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு வழங்கிப் பாராட்டியுள்ளது.
சாலைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட 300 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் குணமடைந்த 160 பேர் முகவரிகளைக் கண்டறிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 83 ஆண்கள், 37 பெண்கள் ஊர், பேர் தெரியாமல் இந்த இல்லத்தில் பராமரிப்பில் உள்ளனர். இவர்கள் மூலம் தெருக்களில் உள்ள முட்புதர்கள், குப்பபைகள் அகற்றப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொண்டு நிறுவனத்தில் உள்ள மனநலம் பாத்தக்கப்பட்டவர்களால் ஒரே இடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.