நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களுக்காக சிறிய இயந்திரங்கள் மூலம் தரமான தேயிலைத் தயாரிக்க பயிற்சியும், அவர்களுக்கான சிறு தேயிலை தொழிற்சாலை அமைக்கவும் உள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நீலகிரி தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் இந்தத் தொழிலை நம்பியுள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலைத் தவிர்க்க தேயிலை வாரியம் தற்போது புது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன்படி நீலகிரியில் உற்பத்தியாகும் பசுந்தேயிலை மூலமாக சர்வதேச அளவில் தரம் வாய்ந்த இயற்கையான தேயிலைத் தூளைப் தயாரிப்பதற்காக பழங்குடியின மக்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு அதை சந்தைப்படுத்துவதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்து வருகிறது. இதன் மூலம் நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மைக்ரோ தேயிலைத் தொழிற்சாலை மூலம் தயார்படுத்தப்படும் தேயிலைக்கு சர்வதேச அளவில் கிலோவுக்கு ரூ. 800 முதல் ரூ. 900 வரை விலை கிடைப்பதால் அதற்கேற்றாற் போல் தேயிலை விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
உற்பத்தி செலவை குறைக்கும் வகையில் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கும், அதற்கேற்றாற்போல் உற்பத்தி செய்வதற்கும் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் குழுவாக உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு 40 சதவீதம் வரை மானியத்துடன் கூடிய உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ஏலத்தில் விற்பனையாகும் விலையில் 65 சதவீதத்தை விவசாயிகளுக்கும், 35 சதவீதத்தை தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் முழு பலனும் விவசாயிகளை விரைவில் சென்றடையும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 அக்டோபர் வரை 37 கோடி வரை நிலுவை வைத்துள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தேயிலைத் தொழிற்சாலைகள் வருங்காலத்தில் தேயிலைக்கு உரிய விலை கொடுப்பார்கள் என நம்புகிறோம் என்றார் .
- ஜான்சன் சி.குமார்