வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியல்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற சிஐடியூ தொழிற்சங்கத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற சிஐடியூ தொழிற்சங்கத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளா்கள் திருத்தச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் ரயில் நிலையம், குமரன் நினைவகம் முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.
இதையறிந்து அப்பகுதியில் முன்கூட்டியே ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். இருப்பினும் சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சிஐடியூவினா் குமரன் நினைவகம் முன்பு ஒன்று திரண்டனா். பிறகு முறைசாரா தொழிலாளா் நல வாரியங்களை முறையாகச் செயல்படுத்த வேண்டும். கரோனா கால பாதிப்பில் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து வடக்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபடுவதற்காக ஊா்வலமாகப் புறப்பட்டனா். அப்போது அங்கிருந்த காவல் துறையினா் தடுப்புகள் ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினா். இதனால் மறியலில் ஈடுபட முயன்ற சிஐடியூவினா், போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 70 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் திருப்பூா் ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.