பங்குச் சந்தைகளில் மந்தம்: சென்செக்ஸ் 232 புள்ளிகள் சரிவு
அரசியல் நிலவரங்கள், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதார நிலவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் திங்கள்கிழமை 232 புள்ளிகள் சரிந்தது.
அரசியல் நிலவரங்கள், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பொருளாதார நிலவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் திங்கள்கிழமை 232 புள்ளிகள் சரிந்தது.
இந்தக் காரணங்களால் பங்கு வர்த்தகம் தொடர்ந்து 5-ஆவது நாளாக இறங்குமுகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வராக பதவியேற்றிருந்த பாஜக-வின் எடியூரப்பா, சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதனால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.
அத்துடன், நீரவ் மோடி முறைகேடு விவகாரம் காரணமாக பஞ்சாப் யூனியன் வங்கியின் தர வரிசை எண்ணை மூடிஸ் சந்தை ஆய்வு நிறுவனம் குறைத்தது.
இதன் காரணமாகவும் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினர்.
இந்தச் சூழலில், திங்கள்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 34,880 புள்ளிகளில் தொடங்கி, 126 வரை அதிகரித்து அதிகப்பட்சமாக 34,974 புள்ளிகள் வரை சென்றது.
எனினும், பெருமளவில் பங்குகள் விற்பனைக்கு வந்த காரணத்தால் அது சரியத் தொடங்கி, இறுதியில் 34,594 புள்ளிகளாக நிலைத்தது. இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் திங்கள்கிழமை 232 புள்ளிகள் (0.67%) சரிவைக் கண்டது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 79.7 புள்ளிகள் (0.75%)
சரிந்து 10,505.8 புள்ளிகளாக நிலைத்தது.