கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்கப் படையினர் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இதில், ஈரானின் கப்பல் ஒன்றை அவர்கள் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ”கடற்படையினர் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர்” எனக் கூறினார்.
ஃப்ளோரிடாவில் நேற்று (மே 1)நடைபெற்ற பேரணியின் போது பேசிய டிரம்ப், “நமது கடற்படையினர் அந்தக் கப்பலின் மேலே இறங்கினர். பின்னர் அதனை முழுவதுமாகக் கைப்பற்றினர். நாம் அந்த சரக்குக் கப்பல் மற்றும் அதனுள் இருந்த எண்ணெய் ஆகியவற்றை கைப்பற்றினோம். இது மிகவும் இலாபகரமான தொழில். நமது படையினர் ஒருவகையில் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர். அவர்கள் விளையாட்டாக அதில் ஈடுபடவில்லை” என்று தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் அதன்வழியே செல்லும் கப்பல்களிடம் வரி வசூலிக்கத் திட்டமிட்டருந்தது. இதுபற்றி அரசியல் வல்லுநர்கள் எச்சரித்திருந்த நிலையில் அமெரிக்கப் படையினரை கடற்கொள்ளையர்கள் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த நிலையில் அது தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்குத் தலைமையான அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டகம் ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்படுவதை உறுதி செய்யும் விதமாக 45 கப்பல்கள் அங்கு திருப்பிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
”இந்த முற்றுகை தேவைப்படும் வரை நீடிக்கும். ஈரான் துறைமுகத்திற்குச் செல்லும் அனைத்து கப்பல்களும், அது எந்த நாட்டின் கப்பலாக இருந்தாலும் அவை முற்றுகையிடப்படும்” என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
அமெரிக்கா இந்த முற்றுகையைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல்கள் செல்வது தடுக்கப்படும் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.