குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக 59 நிமிடங்களில் முதல் கட்ட அனுமதி வழங்குவதற்காக பிரத்யேக வலைதளம் மத்திய அரசின் நிதித்துறை சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கென தனியாக அமைச்சகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், தொழில் முனைவோரின் நலனுக்காகவும் பல்வேறு மானிய மற்றும் கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நிதித்துறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரையில் கடனுதவி வழங்குவதற்கு 59 நிமிடங்களில் முதல் கட்ட அனுமதி வழங்கும் பிரத்யேக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (ஸிட்பி) மற்றும் பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, விஜயா வங்கி ஆகியவை 59 நிமிடங்களில் கடனுதவி வழங்குவதற்கான முதல் கட்ட அனுமதியை வழங்குகின்றன.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜ்ஜ்ஜ்.ல்ள்க்ஷப்ர்ஹய்ள்ண்ய்59ம்ண்ய்ன்ற்ங்ள்.ஸ்ரீர்ம் வலைதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து, உள்ளீட்டு முகவரி மற்றும் ரகசிய குறியீட்டைப் பெற வேண்டும். பிறகு அதன் மூலம் அந்த வலைதளத்தில் கடனுதவிக்காக கோரப்படும் ஆவணங்கள், தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் ஆவணங்களும், தகவல்களும் உரிய முறையில் இருந்தால், 59 நிமிடங்களில் கடனுதவிக்கான முதல் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. முதல் கட்ட அனுமதி வழங்கிய பிறகு 7 முதல் 8 நாள்களுக்குள் விண்ணப்பதாரருக்கு கடன் தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.