5ஜி ஸ்மார்ட் போன்களில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்!
இந்தியாவில் 5ஜி சேவை இல்லாத நிலையிலும் பணக்காரர்கள் பலரும் 5ஜி ஸ்மார்ட் போனை விரும்புவதாக சைபர் மீடியா ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை இல்லாத நிலையிலும் எதிர்காலம் கருதி இந்தியர்கள் பலரும் 5ஜி ஸ்மார்ட் போனில் முதலீடு செய்வதாக சைபர் மீடியா ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவையை பயன்படுத்திய பயனர்களின் கருத்துகளை அடுத்து இந்தியர்களும் 5ஜி சேவையைப் பெற ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக 5ஜி சேவையை பயன்படுத்தும்போது சிறந்த வீடியோ கிடைக்கும் என்று நம்புகிறார்கள். மேலும், ஒட்டுமொத்த 5 ஜி ஸ்மார்ட்போன் பயனர்களில் ஐந்தில் நான்கு பேர் 5ஜி பயன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவிலும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரித்துள்ளதாக சைபர் மீடியா ரிசர்ச் கூறுகிறது.
சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை-தொழில்துறை புலனாய்வுக் குழுவின் பிரபு ராம் இதுகுறித்து, '5ஜி சேவை நம்மை இந்த உலகத்துடன் அடுத்த கட்டத்துக்கு இணைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
'5 ஜி ஃபியூச்சர் நவ்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 5,000 பேர் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவிலிருந்து 3,000 பேரும், சீனாவிலிருந்து 1,000 பேரும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 1,000 பேரும் பங்கேற்றனர்.
சீனா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பகால 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள், விடியோ உருவாக்கம், விடியோ அழைப்பு, மொபைல் கேமிங் உள்ளிட்டவைகளுக்கு நன்றாக பயன்படுவதாகத் தெரிவித்தனர். இந்தியாவைப் பொருத்தவரை உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்கள் பலரும் 5ஜி சேவையை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போதுள்ள ஒவ்வொரு ஐந்து பிரீமியம் ஸ்மார்ட்போன் பயனர்களில் கிட்டத்தட்ட மூன்று பேர் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறத் தயாராக உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.