முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பலி!

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலியானது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 11:20 AM
இந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து விபத்தில் 7 பேர் பலி - கோப்புப்படம்
பகிர்:

இந்தூர்: மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் குமார் சிங் கூறியதாவது:

இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் மூன்று அடுக்கு குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

Advertisement

ஆரம்பத்தில், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அது திகிலூட்டும் விதமாக இருந்தது, ஆனால் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் மூன்று பேர் மீட்கப்பட்டனர், துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் ஏழு பேர் பலியாகினர்" என்று சிங் கூறினார்.

தீ விபத்தால் அதிக வெப்பம் உருவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள வீடுகளையும் கட்டடங்களையும் தீயணைப்பு வீரர்கள் சோதித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

​​சார்ஜிங் பாயிண்ட் வெடித்தது தான் காரணமா?

தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்கு வெளியே மின்சார வாகனம் ஒன்று சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, ​​சார்ஜிங் பாயிண்ட் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு, காரிலிருந்து தீ வீட்டிற்குப் பரவியுள்ளது. கட்டடத்தில் மின்னணு பூட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததால் சிலிண்டர் வெடிப்புக்குப் பிறகு மின்வெட்டு ஏற்பட்டிருக்கலாம் மற்றும் கதவுகள் பூட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் வீட்டிற்குள் 10-க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் சில வெடித்தது. சிலிண்டர்கள் வெடிப்பதை அதிகாலை 4:30 மணி வரை பார்க்க முடிந்தது என்று ஆணையர் கூறினார்.

மேலும், பக்கத்தில் இருந்த வீட்டின் மேல் தளம் வழியாக சென்று மூன்று பேரைக் காப்பாற்றியதாக கூறியவர், தீப்பிடித்த வீடு பாலிமர் தொழில் நடத்தி வந்த மனோஜ் புகாலியாவுக்குச் சொந்தமானது. வீட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய சில ரசாயனங்களும் வைக்கப்பட்டிருந்ததாகவும் சி.பி. சிங் கூறினார்.

இதற்கிடையே, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்தூர் மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா தெரிவித்தார்.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வீட்டில் வேறு யாரும் வசிக்கவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மின்சார வாகனம் ஒன்று சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். கட்டடத்தில் ஏற்பட்ட மின்னணு பூட்டுகள் பொருத்தப்பட்டிருந்ததால் மீட்புப் பணியில் மீட்புக் குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டதாவும், இதுவரை இரண்டு தளங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு தளத்தைச் சரிபார்த்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

summary

At least seven people have died after a massive fire broke out in a three-storey residential building in Madhya Pradesh's Indore due to gas cylinder explosions, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.