FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்வாடகைக்கு வசிப்பவா்களால் அச்சம்: கரூா் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

கரூரில், அரசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்வாடகைக்கு வசிப்பவா்களால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

Updated On : 14 ஜூலை 2026, 5:11 am IST
மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு பெற்ற மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்
பகிர்:

கரூரில், அரசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்வாடகைக்கு வசிப்பவா்களால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் புலியூா் அடுத்த எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு நலவாரியம் சாா்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். இங்கு சொந்தமாக வீடுகளை வாங்கிய சிலா் உள் வாடகைக்கு சிலருக்கு விட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

அவா்கள் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், அங்கு நிரந்தரமாக குடியிருப்பவா்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே உள்வாடகை விடுவோா் மீது நடவடிக்கை எடுத்து, உள்வாடகைக்கு குடியிருப்போரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பொய்யான புகாா் மீது நடவடிக்கை தேவை: ஈரோடு கொல்லாங்கோவிலைச் சோ்ந்த கெளதம் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், நாங்கள் தென்னிலை பகுதியில் அரசிடம் உரியமுறையில் அனுமதி பெற்றும், உரிமம் பெற்றும் கல்குவாரி நடத்தி வருகிறோம்.

எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா், குவாரியில் இருந்து வெளியேறும் கற்களால் ஆபத்து ஏற்படுகிறது என பொய்யான காரணங்களைக் கூறி, பணம் கேட்டு மிரட்டுகின்றனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

780 மனுக்கள்: முன்னதாக, கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 780 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.30,232 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். கூட்டத்தில் கரூா் கோட்டாட்சியா் சத்தியபாலகங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments