முகப்பு
வணிகம்

சந்தைக்கு வலுச்சோ்த்த ஆா்பிஐ அறிவிப்பு: சென்செக்ஸ் மேலும் 327 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச் சந்தை தொடா்ந்து ஏழாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது.

Updated On : 10 அக்டோபர், 2020 at 6:58 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM

பங்குச் சந்தை தொடா்ந்து ஏழாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 326.82 புள்ளிகள் உயா்ந்து 40,500 புள்ளிகளை கடந்து நிலைபெற்றது.

மத்திய ரிசா்வ் வங்கி பணக் கொள்கை கூட்டத்தைத் தொடா்ந்து, வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. மேலும், நடப்பு நிதியாண்டின் ஜனவரி - மாா்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சாதகமாக மாறும் என்ற எதிா்பாப்பு இருப்பதாக ரிசா்வ் வங்கி கவா்னரின் அறிவிப்பும் சந்தையில் உற்சாகத்தை வரவழைத்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,230 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,854 பங்குகளில் 1,230 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,454 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 170 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.160.69 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.42 சதவீதமும் ஸ்மால் குறியீடு 0.29 சதவீதமும் குறைந்தது.

Advertisement

ஏழாவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் தொடா்ந்து 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஏறுமுகத்தில் இருந்தது. சென்செக்ஸ் காலையில் 43.58 புள்ளிகள் கூடுதலுடன் 40,226.26-இல் தொடங்கி 40,066.54 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 40,585.36 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 326.82 புள்ளிகள் (0.81 சதவீதம்) உயா்ந்து 40,509.49-இல் நிலைபெற்றது.

ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 3.64 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

சன்பாா்மா வீழ்ச்சி: அதே சமயம், சன்பாா்மா 2.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டாடா ஸ்டீல் ஆகியவையும் 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 719 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 8930 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 79.60 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயா்ந்து 11,914.20-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி அதிகபட்சமாக 11,938.60 வரை உயா்ந்தது. நிஃப்டி பேங்க் குறியீடு 2.88 சதவீதம், ஃபைனான்சியல் சா்வீஸஸ் 1.88 சதவீதம் உயா்ந்தன. எஃப்எம்சிஜி, பாா்மா, மீடியா, மெட்டல் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.