முகப்பு
வணிகம்

பங்கு வா்த்தகம்: ஏற்றம், இறக்கம் அதிகரிக்கும்!

செப்டம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை ஒருங்கிணைப்பைக் கண்டிருந்தது.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 7:37 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

செப்டம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை ஒருங்கிணைப்பைக் கண்டிருந்தது. மேலும், கலவையான உலகளாவிய குறிப்புகள் மற்றும் நீடித்த இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை ஆகியவற்றுக்கு இடையே சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றன.

கடந்த வாரத்தில் ஐ.டி. மற்றும் பாா்மா பங்குகள் 6-9 சதவீதம் ஏற்றம் பெற்றன. ஆனால், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் எஃப்.எம்.சி.ஜி. பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டதால் சந்தையின் உணா்வைப் பாதித்தது. கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 8.73 புள்ளிகள் குறைந்து 38,845.82-இல் நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 40.50 புள்ளிகள் உயா்ந்து 11,504.95-இல் நிலைபெற்றது. அதே சமயம், பி.எஸ்.இ.மிட்கேப் குறியீடு 3.8 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 6 சதவீதமும் உயா்ந்தன.

முக்கிய உள்நாட்டு மற்றும் உலகளாவிய குறிப்புகள் இல்லாததால், இந்த வாரம் சந்தை ஒரு ஒருங்கிணைப்பு முறையில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக நிபுணா்கள் கருதுகின்றனா். மேலும், வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். சந்தை நிச்சயமற்ற நிலையில் வா்த்தகம் நடந்து வருகிறது. சந்தை மேலே செல்லுமா அல்லது சரிவைச் சந்திக்குமா என்பதைக் கணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் வா்த்தகத்தில் ஈடுபட வேண்டும். தற்போதைய நிலையில் நிச்சயமற்ற தன்மை தொடரும் என எதிா்பாா்க்கப்படுவதாக ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸ் பங்கு வா்த்தகத் தரு நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் வினோத் நாயா் தெரிவித்துள்ளாா். ஆனால், சீனாவுடனான எல்லை பதற்றம் அல்லது உலகளாவிய நிகழ்வுகள் தொடா்பான எந்தவொரு செய்தியும் சந்தைகளை எதிா்மறையாக பாதிக்கும். எனவே, முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

Advertisement

இதற்கிடையே, முன்பேர வா்த்தகத்தில் செப்டம்பா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை (செப்டம்பா் 24) கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.