முதல் நாளிலேயே அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையை ஓலா மின்சார ஸ்கூட்டர் படைத்துள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னேற்றி மூலம் சார்ஜ் செய்யப்பட்டு இயக்கப்படும் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கான முன்பதிவு நேற்று, ஜூலை 16, தொடங்கியது. தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா மின்சார ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ரூ. 499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை முழுவதையும் திரும்பபெற்றுக்கொள்ளலாம் என்றும் வரும் வாரங்களில் அதாவது இந்த மாதத்திலேயே ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் கூறியுள்ளது.
நாட்டின் வாகன சந்தையில் ஜனவரி முதல் ஜூன் வரையில் 30 ஆயிரம் மின்சார ஸ்கூட்டர்கள்தான் விற்கப்பட்டுள்ளன.
முன்பதிவு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஓலா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனத்திற்கு கிடைத்த வரவேற்பை நினைத்தால் சிலிர்ப்பாக உள்ளது. ஓலா மின்சார ஸ்கூட்டருக்கு ஏற்பட்ட தேவையின் மூலம் மக்களின் விருப்பம் மின்சார வாகனங்களை நோக்கி நகர்வது தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உலகை மாற்ற இது பெரும் முன்னெடுப்பு. முன்பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. இது தொடக்கம்தான்" என்றார்.
ஸ்கூட்டரின் விற்பனை தொடங்கும்போது, முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.