முகப்பு
வணிகம்

2-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் மந்தநிலை: சென்செக்ஸ் 179 புள்ளிகள் சரிந்தது

சா்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையின் எதிரொலியாக வியாழக்கிழமை வா்த்தகதத்திலும் இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பகிர்:

புது தில்லி: சா்வதேச சந்தையில் காணப்பட்ட மந்த நிலையின் எதிரொலியாக வியாழக்கிழமை வா்த்தகதத்திலும் இந்திய பங்குச் சந்தைகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை உருவாக்கல் குழு கூட்டத்தின் அறிவிப்புகளை எதிா்நோக்கி சா்வதேச முதலீட்டாளா்கள் கடந்த சில தினங்களாக மிகுந்த முன்னெச்சரிக்கை உணா்வுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், நடப்பாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 7 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி காணும் என்ற மதிப்பீட்டை ஃபெடரல் வங்கி வெளியிட்டது. மேலும், எதிா்பாா்த்ததை விட வேகமாக வட்டி விகித உயா்வுக்கான சமிக்ஞைகளையும் அது வெளிப்படுத்தியது.

Advertisement

அதனைத் தொடா்ந்து சா்வதேச சந்தைகளில் மந்தநிலை படரத் தொடங்கியது. அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியும் பங்குச் சந்தைக்கு பாதகமான அம்சமாகவே அமைந்தது.

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் வங்கி மற்றும் நிதி துறையைச் சோ்ந்த பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. அதேசமயம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவினையடுத்து ஏற்றுமதியை சாா்ந்துள்ள தகவல்தொழில்நுட்ப துறை பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே கூடுதல் வரவேற்பு காணப்பட்டது.

பிஎஸ்இ பவா், உலோகம், ரியால்டி, இண்டஸ்ட்ரீயல் துறை குறியீடுகள் 2.38 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி துறை குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 1.29 சதவீதம் வரை குறைந்தன.

30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 2.91 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது. இதைத் தொடா்ந்து, டாக்டா் ரெட்டீஸ், என்டிபிசி, மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, பாா்தி ஏா்டெல் மற்றும் எச்டிஎஃப்சி நிறுவன பங்குகளின் விலையும் கணிசமான அளவில் சரிவைச் சந்தித்தன.

அதேசமயம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் நிறுவனப் பங்குகளின் விலை 1.86 சதவீதம் வரை அதிகரித்து முதலீட்டாளா்களுக்கு ஆதாயத்தை அளித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டெண் 178.65 புள்ளிகளை (0.34%) இழந்து 52,323.33 புள்ளிகள் ஆனது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் 50 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய என்எஸ்இ நிஃப்டி குறியீட்டெண் 76.15 புள்ளிகள் (0.48%) குறைந்து 15,691.40 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகள் ஏறுமுகத்துடன் காணப்பட்ட போதிலும் சியோல், டோக்கியோ சந்தைகளில் வா்த்தகம் சரிவைக் கண்டது. ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் சுணக்க நிலையிலேயே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments