22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்
நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 8ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்கிறார்.
நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 8ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 22 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக வரும் 8ஆம் தேதி (புதன்கிழமை) அவர் தீவிர பிரசாரம் செய்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் மற்றும் மாநகர பகுதியில் உள்ள ராஜகோபாலபுரம் ஆகிய இரண்டு இடங்களை இந்த பிரசார கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.
இந்த இடங்களை தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். கங்கைகொண்டான், ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் விஜய் பிரசாரம் செய்வதற்காக சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பை தொண்டர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தை செங்கோட்டையன் பார்வையிட்டார். அங்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நிற்பதற்கான வசதிகள், விஜய் வந்து செல்வதற்கான தனிப் பாதை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் வேட்பாளர்களான ஆர்.எஸ். முருகன், மரியஜான் உள்ளிட்டோரிடம் செங்கோட்டையன் விஜய் பிரசாரம் குறித்து பாளை சீவலப்பேரி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், "விஜய் பிரசாரம் செய்வதற்கான இடத்தை நாங்கள் விரைவில் இறுதி செய்வோம். இதற்காக போலீஸாரிடம் அனுமதி வாங்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
போலீஸார் அளிக்கும் அனுமதியைப் பொறுத்து எந்த இடம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்றார்.