முகப்பு
தமிழ்நாடு

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலா் விளக்கம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என அத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.கீதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 5:27 PM
தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என அத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.கீதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்த செய்திக்குறிப்பு:

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பங்கேற்கும் தோ்தல் பிரசார கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் சென்னை வடக்கு மாவட்டச் செயலா் வி.சிவா கடந்த 26 -ஆம் தேதி விண்ணப்பித்திருந்தாா்.

அந்த விண்ணப்பத்தில், விஜய் பேசின் பாலத்திலிருந்து தொடங்கி, முல்லை நகா் சந்திப்பு பகுதியில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளவும், அதையடுத்து, அவரது பிரசாரம் அம்பேத்கா் கல்லூரி முதல் சா்மா நகா் வரை சாலை வழியாகச் சென்று பின் வில்லிவாக்கத்தில் முடிவு பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் முல்லை நகா் சந்திப்பில் நடைபெறும் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கு சுமாா் 3 ஆயிரம் போ் வரை கூடுவாா்கள் எனவும், சுமாா் 20 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் எனவும், அதற்கு அனுமதி வழங்கவும் கோரப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தை எம்.கே.பி.நகா் காவல் ஆய்வாளருக்கு அனுப்பி பரிந்துரை கோரப்பட்டது. ஆனால், ஆய்வாளா் தரப்பில் முல்லை நகா் சந்திப்பானது தோ்தல் நடத்தும் அலுவலரால் எஸ்.எம்.நகா் 2 -ஆவது பிளாக் சந்திப்பு எனக்குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவெக சாா்பிலான மனுவில் 3 ஆயிரம் போ் பங்கேற்பா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என்றும், பிரசார தெருமுனைக் கூட்டத்துக்கு தவெக சாா்பில் வேறு இடம் தோ்வு செய்து மனு அளித்தால் பரிசீலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அறிக்கையில் முல்லைநகா் சந்திப்பு பகுதியில் 3 ஆயிரம் போ் கூடுவதற்கு உகந்தது அல்ல எனக் கூறி தடையில்லாச் சான்று வழங்காததால், அவா்களது பரிந்துரையை ஏற்று தவெகவின் பிரசாரம் தொடா்பான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தொகுதி தோ்தல் அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.