முகப்பு
வணிகம்

தகவல் தொழில்நுட்பம், மருந்து துறை நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்தது

தொடர்ந்து நான்கு நாள்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை, செவ்வாய்க்கிழமை தொடக்கத்தில் தள்ளாடினாலும், வர்த்தகத்தின் முடிவில் நேர்மறையாக நிலைபெற்றது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

தொடர்ந்து நான்கு நாள்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை, செவ்வாய்க்கிழமை தொடக்கத்தில் தள்ளாடினாலும், வர்த்தகத்தின் முடிவில் நேர்மறையாக நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்தது.
 உக்ரைன் பதற்றத்துக்கிடையே பலவீனமான உலகளாவிய சந்தை குறிப்புகளால் உள்நாட்டு சந்தை காலையில் சரிவுடன் தொடங்கியது. ஏற்றம், இறக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், மேற்கத்திய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது.
 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாகக் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் தகவல் தொழில்நுட்பம் (ஐடி), மருந்து (பார்மா) துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. விலை குறைந்திருந்த நிலையில், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கும் போட்டி காணப்பட்டது. மேலும், அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியானதும் சந்தைக்கு ஊக்கத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, வர்த்தக நேர முடிவில் சந்தை ஏற்றத்துடன் நிலைபெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 2,178 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,427 நிறுவனப் பங்குகளில் 2,178 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,159 நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. 90 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 75 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 76 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.51 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.243.62 லட்சம் கோடியாக இருந்தது.

 581 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 412.69 புள்ளிகள் குறைந்து 52,430.05-இல் தொடங்கி, 52,260.82 வரை கீழே சென்றது. பின்னர், 53,484.26 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 581.34 புள்ளிகள் (1.10 சதவீதம்) கூடுதலுடன் 53,424.09-இல் நிலைபெற்றது.
 ஐடி, பார்மா பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன. 24 பங்குகள் ஆதாயம் பெற்றன.
 இதில், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பார்மா 3.99 சதவீதம், ஐடி நிறுவனமான டிசிஎஸ் 3.29 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, என்டிபிசி, விப்ரோ, டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேப், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 1.50 முதல் 2.80 சதவீதம் வரை உயர்ந்தன. ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம்பெற்றன.
 டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த டாடா ஸ்டீல் 1.73 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. மேலும், டைட்டன், பவர் கிரிட், நெஸ்லே, ரிலையன்ஸ், எஸ்பிஐ உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 382 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,380 பங்குகள் ஆதாயம் பெற்றன. 513 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 150.30 புள்ளிகள் (0.95 சதவீதம்) உயர்ந்து 16,013.45-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 115.40 புள்ளிகள் குறைந்து 15,747.75 -இல் தொடங்கிய நிஃப்டி 15,671.45 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 16,028.75 வரை உயர்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 37 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
 மெட்டல் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 1.48 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 0. 70 சதவீதம் குறைந்தது.
 மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில், ரியால்ட்டி குறியீடு 3.25 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, பார்மா, ஹெல்த்கேர், பிஎஸ்யு பேங்க், மீடியா குறியீடுகள் 2.50 முதல் 2.80 சதவீதம் வரை உயர்ந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →