அனைத்து விதமான சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
மும்பையில் நடைபெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசுகையில்,‘2020, மாா்ச்சில் கரோனா பாதிப்பு இந்தியாவில் தொடங்கியதில் இருந்து பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ.17 லட்சம் கோடியை ரிசா்வ் வங்கி வழங்கி உள்ளது.
இது வருங்காலங்களிலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரிசா்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தொழில் துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வங்கிகள் வலுவான மூலதனத்துடன் நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போா் ஏற்பட்டுள்ளபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அந்நியச் செலாவனி கையிருப்பு அதிகமாக உள்ளது. ஆகையால், எந்தவித சவால்களையும் சந்திக்க இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது’ என்றாா்.