என் கல்வித் தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை சேர்ப்பதில்லை என்றும், அதை பயனற்றதாகவே கருதுவதாகவும் சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனம் மூலம் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வருகிறார். தனது நிறுவனத்தில் பலதரப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறார்.
கல்வி அடிப்படையில் மட்டுமல்லாது, திறமை மற்றும் முழு ஈடுபாட்டின் அடிப்படியிலும் அவரது நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தனது கல்வித் தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை தான் சேர்ப்பதில்லை என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர்,
பிஎச்டி பட்டம் பெற 4 ஆண்டுகள் செலவிட்டேன். ஆனால் அவற்றை பயனற்றது என கடந்துவிட முடியாது. அந்த காலகட்டத்தில்தான் கல்வியை நிஜ வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டேன். பொம்மை மாடல் கல்வியில் நாட்டமில்லை. என் தனிப்பட்ட சுதந்திரத்தை நான் அடைந்ததும் கல்வியால் கிடைக்கும் கெளரவத்தை விட்டு நிஜ வாழ்க்கைக்குத் தேவையான பொறியியலை கட்டமைக்க ஆரமித்தேன்.
நீண்ட நாள்களாகவே என் கல்வித் தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை நான் சேர்ப்பதில்லை. அதனை நான் மதிக்கவில்லை. அதைப் பயனற்றதாகவே கருதுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.