4 மடங்கு அதிகரித்த மாருதி சுஸுகி நிகர லாபம்
கடந்த செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செப்டம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,112.5 கோடியாக உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபத்தோடு ஒப்பிடுகையில் சுமாா் 4 மடங்கு அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.486.9 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் இந்த மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.29,942.5 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.20,550.9 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் மொத்தம் 5,17,395 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில், உள்நாட்டு சந்தையில் 4,54,200-ஆகவும் ஏற்றுமதி சந்தையில் 63,195-ஆகவும் விற்பனை உள்ளது.
கடந்த நிதியாண்டில் மின்னணு உதிரிபாகங்களின் பற்றாக்குறை காரணமாக சுமாா் 35,000 வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக, கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனம் 3,79,541 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது. இதில் 3,20,133 வாகனங்கள் உள்நாட்டு சந்தையிலும், 59,408 வாகனங்கள் ஏற்றுமதி சந்தைகளிலும் விற்பனையாகின என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.