ஒரு சிட்டிகை உப்புகூட ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும்! தினமும் எவ்வளவு உப்பு சேர்க்கலாம்?
ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் உப்பு பயன்பாடு பற்றி...
உப்பு அதிகம் எடுத்துக்கொள்வதால்தான் ரத்த அழுத்தம் ஏற்படுகிறதா? ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ளலாம்?
உப்பு என்பது அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்களில் ஒன்று. அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தக் கூடியது, குறிப்பாக உணவுகளுக்குச் சுவையளிக்கும் அவசியமான பொருள். இருந்தாலும் அளவுக்குள் கொஞ்சம் மீறினால்கூட உப்பு ஆபத்துதான்.
உப்பு என்பது உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் உப்பின் பங்கு குறித்து மருத்துவர்கள் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர். எனினும், உப்பை அளவாகப் பயன்படுத்தவே அறிவுறுத்துகின்றனர்.
Advertisement
Advertisement
கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், "சிலர் உப்பை அதிகம் எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உடலில் அதிகமாக சோடியம் சேர்வதால் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. நாம் உண்ணும் உணவுக்கும் இதயம் செயல்படும் விதத்திற்கும் இடையில் ஒரு சமநிலையை உப்பு உருவாக்குகிறது. அதனால் உங்கள் உடலுக்கு ஏற்ப உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவுகளில் மீண்டும் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்கிறார்.
இருப்பினும் இந்தியாவில் ஸ்நாக்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது, அதுபோல அரிசி உள்ளிட்ட சமைக்கும் உணவுப் பொருள்களில் உப்பு சேர்ப்பது வாடிக்கையாக உள்ளது. இது மிகவும் மோசமானது என்கிறார் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் இதய நோய் நிபுணர் டாக்டர் மேத்யூ.
மேலும் அவர் கூறுகையில், "பிரான்ஸ் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் உணவுப் பொருள்களில் உப்பின் அளவை அந்த லேபிள்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது நுகர்வோருக்கு பெரிதும் பயன்படுகிறது. வெப்ப காலங்களில் வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலுக்கு அதிகமாக உப்பு தேவைப்படலாம். எனினும் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு தீங்கு விளைவிப்பதாகவே உள்ளது.
சிலர் உடலில் உப்பு அதிகரித்துவிட்டது என்று கூறி உப்பின் அளவைக் குறைக்கிறார்கள். இதனால் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்துவிடுகிறது. உடலுக்கு உப்பு அவசியம் தேவைதான். ஆனால், அதனை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக கணினியில் அமர்ந்து வேலை செய்வோருக்கு குறைவான உப்பு போதுமானது, வெயிலில் வேலை செய்வோருக்கு அதிக உப்பு தேவைப்படும்" என்கிறார்.
ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்?
கிம்ஸ்ஹெல்த் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் விஸ்வநாதன், ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவான உப்பையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
"பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவரின் ரத்த அழுத்தம் 5-10 mmHg வரை குறையும்.
உப்பைக் குறைத்தால் உங்களுடைய இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்படும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தாங்கள் நலமாக இருப்பது போன்று உணர்ந்தாலும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் வரும் அபாயம் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்.
உப்பைக் கட்டுப்படுத்துவதுடன் வழக்கமான உடற்பயிற்சி, உடல் எடையை சரியான அளவில் நிர்வகித்தல், மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல், புகைப்பழக்கத்தை நிறுத்துதல், மன அழுத்தத்தைக் கையாளுதல் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
hypertension: A pinch of salt can affect your blood pressure
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.