3 தொடர் நாள் எழுச்சிக்குப் பிறகு சரிவு: 224 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
மூன்று நாள்களாக தொடர்ந்து ஏறுமுகம் பெற்று வந்த பங்குச்சந்தை, புதன்கிழமை லாபப் பதிவு காரணமாக லேசான சரிவைக் கண்டது.
மூன்று நாள்களாக தொடர்ந்து ஏறுமுகம் பெற்று வந்த பங்குச்சந்தை, புதன்கிழமை லாபப் பதிவு காரணமாக லேசான சரிவைக் கண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி
55 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.
உலக அளவில் பெரும்பாலான சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையும் உற்சாகத்துடன் தொடங்கியது. இருப்பினும், நேரம் செல்லச் செல்ல லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால் சந்தை சுணக்கம் கண்டது. குறிப்பாக, முன்னணி ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வர்த்தக நேர இறுதியில் அதிக அளவில் பங்குகள் விற்பனைக்கு வந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.301.66 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.1,197.38 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய
வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 141.44 புள்ளிகள் கூடுதலுடன் 65,759.28-இல் தொடங்கி அதிகபட்சமாக 65,811.64 வரை மேலே சென்றது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தில் 65,320.25 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 223.94 புள்ளிகள் குறைந்து 65,393.90}இல் முடிவடைந்தது.
22 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன; 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,025 பங்குகள் ஆதாயம் பெற்றன; 1,023 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன; 35 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.