மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
மேற்காசியப் போர் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை செய்யவுள்ளது பற்றி...
மேற்காசியப் போர்ச் சூழல் தொடர்பாக நாட்டில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை(மார்ச் 27) காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
இந்நிலையில் மேற்காசியப் போர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக நாளை(மார்ச் 27) மாலை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். மாநிலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலர்களுடன் மோடி ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்த 5 மாநிலங்களும் கூட்டத்தில் பங்கேற்காது என்றும் அந்த மாநில தலைமைச் செயலர்களுடன் தனியே ஒரு கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மேற்காசியப் போர் தொடர்பாக நேற்று(மார்ச் 25) தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.