இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 49.15 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயர்ந்து 18,315.10-இல் நிலைபெற்றது.
உலகளவில் பெரும்பாலான சந்தைகளில் வர்த்தகம் எதிர்மறையாக இருந்து வந்தது. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. அதன் பிறகு எதிர்மறையாகச் சென்றது. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நேர்மறையாக முடிந்தது. முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் பணவீக்கத் தரவுகளுக்காக காத்திருந்ததால் சந்தையில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஆட்டோ, மீடியா, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதேசமயம், பிஎஸ்யு வங்கிப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு:
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.82 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.277.10 லட்சம் கோடியாக இருந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,942.19 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்:
சென்செக்ஸ் காலையில் 82.03 புள்ளிகள் கூடுதலுடன் 61,843.36-இல் தொடங்கி அதிகபட்சமாக 61,974.35 வரை மேலே சென்றது. பின்னர், 61,572.93 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 178.87 புள்ளிகள் உயர்ந்து 61,940.20-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 22 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 1,085 பங்குகள் ஆதாயம் பெற்றன. 945 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.