வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜுன் 3) இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தில் நிறைவு பெற்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் உயர்வுடனேயே முடிந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,507.47 புள்ளிகள் உயர்ந்து 76,468.78 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 3.39 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 733.20 புள்ளிகள் உயர்ந்து 23,263.90 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 3.25 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 25 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 5 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.
எச்சிஎல் டெக், சன் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்ஃபோசிஸ் ஆகிய 5 நிறுவனங்களின் பங்குகள் எதிர்மறையுடன் முடிந்தன.
இதேபோன்று அதிகபட்சமாக என்டிபிசி நிறுவன பங்குகள் 9.20 சதவீதம் உயர்வுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ பங்குகள் 9.11 சதவீதமும், பவர் கிரிட் நிறுவன பங்குகள் 8.97 சதவீதமும், எல்&டி நிறுவன பங்குகள் 6.27 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 5.67 சதவீதமும், ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 5.65 சதவீதமும் ஏற்றத்துடன் முடிந்துள்ளன.
2024 மார்ச் 4 ஆம் தேதிக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்துள்ளன.
அதானி குழுமத்துக்குச் சொந்தமான அதானி போர்ட்ஸ் 10 சதவீதமும், அதானி பவர் ரோஸ் 17 சதவீதமும் உயர்ந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.