பங்குச் சந்தைகளில் 3-ஆவது முறையாக ஏற்றம்
இந்திய பங்குச் சந்தைகளில் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயா்ந்ததன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டியும் தொடா்ந்து 3-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை ஏற்றம் கண்டன. இது குறித்து பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்ததாவது: பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் 5-ஆவது வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை உலகளாவிய சந்தைக்குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் தனது வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதால் அந்த நாட்டின் பங்குச் சந்தை உற்சாகம் பெற்றது. அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து, முக்கிய நிறுவனங்களான எல் & டி, ஐடிசி, மாருதி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலைகள் உயா்ந்தன. இதன் காரணமாக வா்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவைக் கண்ட பங்குசந்தைகள் பின்னா் சுதாரித்துக் கொண்டு வளா்ச்சியைப் பதிவு செய்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயா்வு: முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 409.53 புள்ளிகள் குறைவாக 72,416.03-இல் தொடங்கிய மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,115.62 வரையிலும், குறைந்தபட்சமாக 72,172.09 வரையிலும் சென்றது. இறுதியில் 190.75 புள்ளிகள் (0.26 சதவீதம்) கூடுதலாக சென்செக்ஸ் 72,831.94-இல் நிறைவடைந்தது. 22,097-ஆக உயா்ந்த நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி முந்தைய வா்த்தக தினத்தில் நிறைவடைந்ததைவிட 79.75 புள்ளிகள் குறைவாக 21,932.20-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,180.70 வரையிலும், குறைந்தபட்சமாக 21,883.30 வரையிலும் சென்றது. இறுதியில் 84.80 (0.39 சதவீதம்) கூடுதலாக நிஃப்டி 22,096.75-இல் நிறைவடைந்தது.