இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
சென்செக்ஸ் 504.86 புள்ளிகள் உயர்ந்து 78,493.54 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு 156.80 புள்ளிகள் உயர்ந்து 24,353.55 புள்ளிகளாக நிலைபெற்றன.
மும்பை: இந்தியக் குறியீட்டுச் சந்தையானது, நேற்றைய வர்த்தக இழப்புகளை ஈடுசெய்து, இன்றைய காலை நேர வர்த்தகம் உயர்வுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 504.86 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி குறியீடு 24,300 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை குறைவு, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர் நிறுத்தம், வார இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கை அடிப்படையில், பங்குச் சந்தை வலுவான நிலையில் தொடங்கியது. வர்த்தக அமர்வு முழுவதும் இந்த உயர்வு நீடித்ததுடன், குறியீடுகள் இன்றைய தினத்தின் அதிகபட்ச நிலைக்கு சென்று நிறைவடைந்தன.
வர்த்த முடிவில், சென்செக்ஸ் 504.86 புள்ளிகள் உயர்ந்து 78,493.54 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு 156.80 புள்ளிகள் உயர்ந்து 24,353.55 புள்ளிகளாக நிலைபெற்றன.
Advertisement
இந்த வாரம் மட்டும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் தலா 1.2 சதவீதம் வரை உயர்ந்தன.
அனைத்துத் துறைசார் குறியீடுகளும் உயர்வுடன் நிறைவடைந்தன. இதில் எஃப்.எம்.சி.ஜி, ஊடகம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், மூலதனப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகள் தலா 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் மறுபுறம் சன் பார்மா, மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ மற்றும் எச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், நெஸ்லே, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியவை அதிக பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் விப்ரோ, எச்.டி.எஃப்.சி. லைஃப், சன் பார்மா, எல் & டி மற்றும் எம்&எம் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடும் 1.2 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடும் 1.5 சதவீதமும் வரை உயர்ந்தன.
தரவுகளின் அடிப்படையில், நேற்று (வியாழக்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 382.36 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
லாயிட்ஸ் மெட்டல்ஸ், சீமென்ஸ், ஏபிபி இந்தியா, அபார் இண்டஸ்ட்ரீஸ், என்எல்சி இந்தியா, அதானி எனர்ஜி, பிஹெச்இஎல், அதானி பவர், ஆனந்த் ரதி, சிர்மா எஸ்ஜிஎஸ், வெல்ஸ்பன் கார்ப், கிரானுல்ஸ் இந்தியா, அரவிந்தோ பார்மா, செய்ல், டாடா பவர், ஜே&கே வங்கி, குஜராத் மினரல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார அதிகபட்ச விலையை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், 3.07 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 96.34 டாலராக உள்ளது.