முகப்பு
வணிகம்

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

Updated On : 14 மே, 2024 at 8:20 PM
பகிர்:

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.1,439 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உள்ளது

இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கி ரூ.1,350 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.17,913 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.16,549 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.5,523 கோடியிலிருந்து ரூ.5,937 கோடியாக அதிகரித்துள்ளது

2023 மாா்ச் இறுதியில் 7.31 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன், கடந்த மாா்ச் இறுதியில் 4.98 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக்கடனும் 1.66 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் ரூ.6,318 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டு வங்கி ஈட்டிய ரூ.4,023 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 57 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.